இரண்டு முத்தங்கள் கொடுத்து
இனிப்பானதை எடுத்துக்கொள் என்றாய்.
இயலாத செயலென
இரண்டையும் திருப்பிக் கொடுத்தேன்.
நீ வந்து பேசுகையில் பூக்களுக்கு வருத்தம்தான்.
காற்றிலேயே
தேன் குடித்து திரும்பி விடுகின்றனவாம்
தேனீக்கள்!
உன்னை நினைத்துக்கொண்டிருப்பதைப் போலவே
இனிப்பாய் இருக்கிறது.
நீயுமென்னை நினைத்துக்கொண்டிருப்பதாய்
நினைத்துக்கொள்வது!
இனி மொட்டைமாடியில் தூங்காதே.
போகவே மாட்டேனென
அடம்பிடிக்கிறது,
நிலா!
உன் வீட்டு ரோஜா மொட்டு
மலரவே இல்லையென குழம்பாதே.
மலர்தான் உன்னை முத்தமிட
எப்பொழுதும் இதழ் குவித்து ஏங்குகிறது!
உன்னைப்போலவே
உனது முத்தங்களுக்கும் காதல் அதிகம்தான்.
முதல் நாளின் கடைசி முத்தம்
அடுத்த நாளின் முதல் முத்தத்தை
சந்திக்கும் வரை உறங்குவதேயில்லை.
நம் முத்தங்களைக் கண்டு
இதழ்களாய் மாறிட ஏங்கும்
விழிகள் நான்கும்.
உன்னை நினைத்தே என் வாழ்க்கை பயணம்
கவிதை , காதல் , காதல் ரசிகன் , ரசிகன்பாலு
0 comments:
Post a Comment